தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக உறுப்பினர்களின் வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.
சட்டப்பேரவையில், வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்ததன் மூலம் துரோகம் இழைத்துள்ளது. விவசாயிகள் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஆதரித்திருக்க வேண்டும். தெரிந்தே, வேண்டுமென்றே அ.தி.மு.க. துரோகம் செய்துள்ளது.
இதன்மூலம் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது, இந்தத் தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் உள்நோக்கமும் தெரிய வந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.